ரமணாச்ரமம்

அமைவிடம்:

அகிலெமெலாம் ஆர்வமுடன் பார்க்கும் ஆன்மீக பூமியாம் பாரதத்தாயின் பாதங்களாய் அமைந்துள்ளவை தமிழகமும் கேரளமுமாகும். இதில் தமிழகத்தின் வட பகுதியில் தலைநகரமாம் சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் தென்மேற்கில் அமைந்துள்ள மலைநகரம் திருவண்ணாமலையாகும். இது நினைக்க முக்தி தரும் அருணாசலம் என்று அழைக்கப்படுகிறது. விழுப்புரம்-காட்பாடி புகை வண்டிப் பாதையும் இத்தலத்தைத் தழுவிச் செல்கிறது. இது பெங்களூர் திருப்பதி போன்ற பெரு நகரங்களுக்கும் சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்து மாவட்ட அட்சித் தலைநகரமாகவுமுள்ளது. இந் னநகர மையத்திலிருந்து பெங்களூர் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் ஸ்ரீரமணாச்ரமம் அமைந்துள்ளது.

நுழைவு வாயில்:

கிரிவலப் பாதையில் சேஷாத்ரி சுவாமி ஆச்ரமத்தை கடந்தவுடன் தஞ்சமெனத் தாள் சேர்ந்தார் பாரமெல்லாம் தன்தலைமேல் தாங்கி அரணாய்க் காக்கும் அருணாசல ரமணர் உள்ளே உறைகிறார் என்பதை நமக்கு உணர்த்த நுழைவு வாயிலில் ஒர் வளைவுப் பலகை ஸ்ரீரமணாச்ரமம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் வரையப்பட்டு வரவேற்கிறது.

புலிவாயில் விழுந்தது தப்ப இயலாதது போல ரமணாச்ரம வாயிலினுள் நுழைந்து பயணிப்பவர் அகத்திலும் புறத்திலும் பயன் பெறுவரேயன்றி ஒருக்காலும் பயம் பெறார். உள்ளே நுழைந்தவுடன் சில நூற்றாண்டு காலமாய் வாழந்து வரும் இலுப்பை மரம் உள்ளது அம்மரத்திற்கு மேற்கே ஆச்ரம விளக்கப் பலைகை அமைக்கப்பட்டுள்ளது.

காப்பகம்:

இவ்விலுப்பை மரத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது அரும் பொருட் காப்பகம். ஆன்மீக சாதனையில் பெரும்பாலும் பெளதீகப் பொருட்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை. எனினும் குரு பயன்படுத்தியப் பொருட்கள் நம்முள் குருவின் நினைவலையை எழச்செய்து தொழச் செய்யும் என்பதால் ரமணர் கையாண்ட சில பொருட்களும் அவரது கையெழுத்துப் பிரதிகளும் அங்கே பாதுகாக்கப்படுகின்றன. இதைக்காண பொது அனுமதியில்லை இருப்பினும் பொதுவான விலக்கு உண்டு. இலுப்பை மரத்தின் வடகிழக்கே உண்மைப் பசியாற்றும் உணவகமாம் ரமணப் புத்தகாலயம் அமைந்துள்ளது. அதனருகே நிர்வாக அறை, அலுவலகம், வரவேற்பறை போன்றவை உள்ளன. இவைகளுக்கு எதிரே உள்ள வற்றாக் கிணறு ஆச்ரமத் தாவரங்களுக்கு நற்றாயாகி நீரூட்டுகிறது.

புது மண்டபம்.

1940 களில் பகவானது அருளாசியாலும் அப்போதைய நிர்வாகி சின்ன

சுவாமிகளின் எண்ணக் கனவுகளின் திண்ணத்தாலும் சிற்பிகளின் அற்புத கலைத்திறனாலும் எழுந்தமைந்த மாத்ருபூதேச்வரர் ஆலயத்தின் (தாயார் அழகம்மை சமாதியாலயம்) முன் பகுதியே புது மண்டபம் எனப்படுகிறது. கருங்கற்கள் கொண்டு உருவாக்கப்பட்ட அதன் வடபகுதியில் என்றும் வாழும் எழிற்சிலையாய் பகவான் குடிகொண்டுள்ளார். அதற்கு பின்னால் கல்லாலான பளபளப்பான நீளிருக்கை (சோபா) அமைந்துள்ளது. இவ்விருக்கையில் பகவான் ரமணர் 1949 ஆம் ஆண்டு இறுதி 6 மாதங்கள் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வந்தார். அதனையொட்டிய சுவரின் மேற்புறம் ‘இதயக் குகை….’ எனத்துவங்கும் சமஸ்கிருதப் பாடல் செதுக்கப்பட்டுள்ளது.

மாத்ருபூதேச்வரர் சந்நிதி:

புது மண்டபத்தைக் கடந்து மேற்கே செல்ல ஒரு சிவாலய உட்பிரகாரம் எவ்விதம் அமையவேண்டுமோ அவ்விதம் அமைந்த மாத்ருபூதேச்வர ஆலய உட்சந்நிதியை காணலாம். பகவானது தாயார் அழகம்மையின் புனிதத் திருமேனி ஆங்கே வித்தாகி சிவலிங்க உருக்கொண்டு கருவறையாக அமைந்துள்ளது. இந்த இலிங்கத்திற்கு பின் சுவற்றில் பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ர மேரு அருள் நிலை கொண்டுள்ளது. இலிங்கத்திற்கும் மேருவிற்கும் தினமும் இருவேளை பூஜையும் மேருவிற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, பெளர்ணமி, மாதப்பிறப்பு நாட்களில் சிறப்புப் பூஜையும் நடைபெறுகிறது, இச்சந்நிதியில் வைகாசியில் அழகம்மை முக்தி தின மகாபூஜையும் புரட்டாசியில் நவராத்ரி விழாவும் நடைபெறுகிறது. மற்றும் ஸ்ரீவித்யா ஹோமம் தற்போது தைமாத முதல் வெள்ளிக்கிழமையில் நடைபெறுகிறது.

ரமண சந்நிதி:

தாயார் சந்நிதிப் பிரகார வடவாயில் நம்மை ரமண சந்நிதிக்கு நடத்திச் செல்கிறது. குருவின் சந்நிதியும் அதன் தூண்களும் முன் மண்டபமும் பளபளப்பான கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. புனித குருவின் மனித மேனி அடக்கவிடத்தின் மேல் பளிங்குத் தாமரையும் லிங்கமும் ஆசியளிக்கின்றன. இந்த ரமணலிங்கத்திற்கு நித்தமும் இருவேளை பூஜை வேதபாரயண முன்மொழிதலுடன் நடைபெறுகிறது, சித்திரையில் மகா ஆராதனையும் மார்கழியில் ஜெயந்தி விழாவும் அன்னதானத்துடன் நடைபெறுகிறது. நித்தமும் மாலையில் நிகழும் தமிழ்ப்பாரயணமும் ஞாயிறு நடைபெறும் சமஸ்கிருத பாராயணமும் அன்பர்கள் குருவின் தத்துவத் தாளைப் பற்றிப் பயன்பெற உதவுகிறது.

தியானத் திருவறை:

ரமண சந்நிதியின் வடக்கு வாயிலைக் கடந்தால் இடப்புறம் அமைந்த தியானத் திருவறை நம்மை அழைத்து அமரவைத்து அமைதியளிக்கிறது. இவ்வறையின் ஈசான மூலையில் தான் பகவான் பக்தர்களின் ஈசனாய் நீளிருக்கையில் அமர்ந்திருந்து சுமார் 25 வருடகாலம் பக்தியையும் தத்துவத்தையும் பாசத்துடன் பரிமாறிக் கொண்டிருந்தார். தியானத் திருவறைக்கு கிழக்கே பகவான் தண்டத்தால் ஊற்றெடுத்து உருவாக்கப்பட்ட கிணறு அமைந்துள்ளது. பூஜைக்கான புனித நீர் அதிலிருந்து பெறப்படுகிறது, அக்கிணற்றுக்கு கிழக்கே அமைந்த ஆதிகால அலுவலகமும் புத்தகாலயமும் தற்சமயம் புதிய தியானத் திருவறைகளாக பரிணாமம் பெற்றுள்ளன.

மகாநிர்வாணப் பெருவறை:

தாயார்-பகவான் ஆலய மைய எதிர்புறம் பகவான் தேகவாழ்வின் இறுதியில் வாழ்ந்த மகா நிர்வாணப் பெருவறை அமைந்துள்ளது. 1950 ஏப்ரல் 14 இரவு 8.47 மணிக்கு இவ்வறையில்தான் பகவான் திருமேனி தமது இறுதி சுவாசத்தை சுவாசித்தது. அச்சமயம் வானில் ஒரு வசீகரத் தாரகை தவழ்ந்து மலையுச்சியுள் மறைந்தது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 இரவு 8.15 க்கு இப்பெருவறையின் முன் அன்பர்கள் அமர்ந்து அருணாசல அக்ஷரமணமாலை பாராயணம் செய்வர். அச்சமயம் குருவின் அருமைமிகு அருள் நமக்கு அருகாமையில் தவழ்வதை உணர்வோம்.

நிர்வாக சுவாமி சமாதிகள்:

மகாநிர்வாணப் பெருவறைக்கு சற்று கிழக்கே ஆச்ரம முன்னாள் அதிகாரிகளான நிரஞ்சனானந்த சுவாமிகள் மற்றும் அவர்வழிவந்த ரமணானந்த சுவாமிகளின் சமாதிகள் அமைந்துள்ளன. தன்னலமற்ற ஓயா உழைப்பு என்பதன் உருவகமாய் வாழ்ந்த அவர்களுக்கு குருவருளால் இங்கே கருவறை அமைந்துள்ளது.
பாகசாலை:

பக்தர்களின் இறைபசிக்கு உணவளிப்பதோடு நில்லாமல் இரைப்பை பசிக்கும் உணவளிக்கும் பகவானது ஆசியின் பாச வெளிப்பாடாய் பாகசாலை 1930 களில் தியானத் திருவறைக்கு சற்று வடகிழக்கே வளர்ந்துள்ளது தற்சமயம் அது விரிவுபடுத்தப்பட்டு சுமார் 400 அன்பர்கள் ஒரே சமயத்தில் உணவளிக்கப்படும் வண்ணம் அமைந்துள்ளது. அதன் கிழக்குப் பகுதியில் சமையற் கூடம் எனும் அடுப்பறை அமைந்துள்ளது. பகவான் எவ்விதம் பக்தர்களுக்கு ஈன்றிடும் அன்னையினும் பெரிதருள் புரியவேண்டி இங்கே வேலை செய்தார் என்பதை இவ்வடுப்பறை அடுக்கடுக்காய் எடுத்துச் சொல்லும். இவ்வறைக்கு கிழக்கே தானிய சேமிப்பறை அமைந்துள்ளது.

முக்தர்-பக்தர் சமாதிகள்:

சித்தர்கள் தம்மிடம் பல்வேறு ரூபங்களில் வந்திருப்பர் என்பது ரமண வாக்கு. அதாவது மனிதவுரு மட்டுமன்றி விலங்கு பறவை போன்ற வடிவங்களிளும் வருவர் என்பது இதன் பொருள். பகவானது ஆசிப்படியும் அறிவுரைப்படியும் பாகசாலைக்கு மேற்கே பசுலட்சுமி, வள்ளிமான், ஜாக்கி நாய், காகம் போன்றவைகளின் சமாதிகள் அமைந்துள்ளன. பசுலட்சுமி முக்தி பெற்றதை அச்சமாதியில் வடிகப்பட்டுள்ள பகவானது பாடல் கூறுகிறது. எனவே இங்கே அமைந்துள்ள விலங்கினங்களின் சமாதிகள் விசேடத்தன்மை வாய்ந்தவை என்பது விளங்குகிறது. இச்சமாதிக்கு வடமேற்கே ஓடையின் மறுபக்கம் மலையையொட்டி மெய்யன்பர்களாகிய முருகனார், சுவாமி ராஜேஸ்வரானந்தர், குஞ்சு சுவாமி, விஸ்வநாத சுவாமி, ராமசாமிப்பிள்ளை போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன. மேற்கூறிய அன்பர்கள் மற்றும் பசு லட்சுமி வருட நினைவு நாட்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறுகின்றன.

வைத்யசாலை:

தியானத் திருவறைக்கு வடமேற்கே வைத்தியசாலை அமைக்கப்பட்டது. பகவானது இடப்புய கட்டிக்கான அறுவை சிகிச்சை 1949 இல் இக்கட்டிடத்தில் நடைபெற்றது. அடிப்படை சுகாதர சேவைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கி வந்த இவ்வைத்ய சாலை தற்சமயம் பாலிதீர்த்தக் கரையின் மேற்குப் புரம் அமைக்கப்பட்டுள்ள நவீன கட்டிடத்திற்கு இடம் பெயர்க்கப்ட்டு மேம்படுத்தப்பட்ட சிகிச்சையளிக்கிறது.

வேத பாடசாலை:

ரமண சந்நிதியில் காலை மாலை இருவேளைகள் வேத பாராயணம் நடைபெறுகிறது. இதற்காக வேண்டி தானிய சேமிப்பறைக்குப் பின்புறம் வேதபாடசாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சுமார் 20 மாணவர்கள் வேதம் பயிற்றுவிக்கப் படுகின்றனர். இம் மாணவர்கள் பயிலும் காலத்தில் உணவு உடை முதலிய தேவைகளை ஆசிரமம் அளிக்கிறது. நவீன வைத்யசாலையும் புராதன வேதபாடசாலையும் அமையப்பெற்ற ரமணாச்ரமம் மணிவாசகர் கூறுவதுபோல் முன்னைப் பழம் பொருட்கும் பின்னைப் புதுமைக்கும் முன்னுதாரணமாய் விளங்குவது விளங்கும்.

கோசாலை:

பசு லட்சுமிக்காக ஒரு சிறிய இல்லம் அமைக்க வேண்டி எண்ணத்தில் விதை விழ அது பலப்பல பசுக்கள் வசிக்கும் கோசாலையாக சேவகர்களின் கைவண்ணத்தில் வளர்ந்து விரிந்துள்ளது. சுமார் 100 க்கும் மேற்பட்ட நாட்டு கலப்பின பசுக்கள் இங்கே சேய்களுடன் பராமக்கப்படுகின்றன. இது வேதபாடசாலைக்கு கிழக்கே அமைந்துள்ளது.

அன்பர் தங்குமறைகள்:

வீடுவிட்டு ஈர்த்து உளவீடுபுக்குப் பையவுன்
வீடுகாட் டினையருள் அருணாசலா

என்பது ரமணத் திருப்பாடல்வரிகள்.

அகவீடு அடைய ஆர்வமுடன் நாடும் அன்பர்கள் தங்க புறவீடும் ரமணாச்ரமத்தில் அமைந்துள்ளது. வேதபாடசாலைக்கு எதிரிலும் அருகிலும் மற்றும் பசுலட்சுமி சமாதிக்கு மேற்குப் புறத்திலும் இவை அமைந்துள்ளன. இங்கேயும் பகவான் பக்தர்களான மேஜர் சேட்விக், கோஹன், கன்னா, லுசிமா, ஜெகதீஸ் சுவாமி ஆகியோரது சமாதிகள் அமைந்துள்ளன. ஆச்ரம வளாகத்திற்கு வெளிப்புறமும் தங்குமறைகள் அமைக்கப்பட்டுள்ளன.,

நூலகம்:

ரமணாச்ரமத்திற்கு எதிர்புறம் அமைந்துள்ள மோர்வி தங்குமறைப் பகுதியின் பின்வரிசையில் ஸ்ரீரமணாச்ரம நூலகம் அமைந்துள்ளது. ரமண ஜெயந்தி நூற்றாண்டையொட்டி விரிவுப்படுத்தப்பட்ட இந்நூலகத்தில் மத, சாத்திர வேறுபாடின்றி சகல மதங்களின் சாரங்களைக் கூறும் புத்தகங்கள் சாரை சாரையாய் அடுக்கில் வளர்ந்து வருகின்றன. ஆன்மீகம் மட்டுமன்றி பொது அறிவு விஞ்ஞானம் தொடர்பான புத்தகங்களும் இங்கே இடம் பெற்றுள்ளன்.

ஆச்ரம தினசரி வழக்க முறைகள்:

காலை 6.45 : ரமண சந்நிதியில் சத்வரிம்ஸத் துதி பால் நைவேத்யம்
7.00 : சிற்றுண்டி காபி
8.00 : பகவான் சந்நிதியில் வேத பாராயணம்
8.30-9.15 : ரமண சந்நிதிப் பூஜை – பின் அன்னை சந்நிதிப் பூஜை
10.30 : நாராயண சேவை (சாதுக்கள்-ஏழைகளுக்கு அன்னமிளித்தல்)
11.30 : மதிய உணவு

மாலை 4.00-4.30 : தேநீர் – பால்
4.00-5.00 : தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பகவான் அருளிய,
குறிப்பிட்ட, தொடர்பான நூல்கள் வாசித்தல்

5.00-5.30 : பகவான் சந்நிதியில் வேதபாராயணம்
5.30-6.15 : ரமண சந்நிதி பூஜை – பின் அன்னை சந்நிதிப் பூஜை
6.30-7.15 : (பிரதி திங்கள் முதல் சனி வரை)
பகவான் அருளிய – பகவான் மீது இயற்றிய தமிழ்ப்
பாடல்கள் பாராயணம்
7.30 : உணவு – பால் பழம்

ஸ்ரீரமண பக்தர்களின் வசதிக்காக எற்படுத்தப்பட்டுள்ள தங்குமிடம், உணவு ஆகியவற்றிற்குக் கட்டணம் ஏதுமில்லை. பக்தர்கள் தாமே மனமுவந்து அளிக்கும் காணிக்கைகளை ஆச்ரம அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.